உசிலம்பட்டி அருகே வன்முறை-போலீஸ் சுட்டு ஒருவர் பலி

மதுரை மாவட்ட உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் ஒரு பிரிவினர் கட்டிய தடுப்பு சுவர் கடந்த மே மாதம் 6ம் தேதி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று முன்தினம் இரவு உத்தபுரம் சென்று திரும்பும் போது எழுமலை என்ற இடத்தில் அவரது கார் தாக்கப்பட்டது.
இதையடுத்து தென் மாவட்டங்களில் பஸ்களுக்கு தீ வைப்பு, பஸ்கள்- கடைகள் மீது கல்வீச்சு, சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து உசிலம்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி இன்று மீண்டும் கலவரம் வெடித்தது.
எழுமலை தெற்கு தெருவைச் சேர்ந்த சந்தன மாரியம்மன் கோவில் தெருவுக்கு சென்ற சிலர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு எதிர் தரப்பினரும் தாக்குதலில் இறங்கினர். இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாசகம், வாசிமலை ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே இ.கோட்டைப்பட்டியில் ஒரு பிரிவினர் சாலையின் குறுக்கே பாறைகளையும் மரங்களையும் போட்டு தடையை ஏற்படுத்தினர்.
மேலும் டிஐஜி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸ் படை அங்கு விரைந்தது. அவர்களை புதிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தடுக்க முயன்றதாகத் தெரிகிறது.
மேலும் போலீசார் பாறைகள், மரங்களை அப்புறப்படுத்த முயன்றபோது அவர்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் 6 போலீசார் காயமடைந்தனர்.
அந்தக் கூட்டத்தினரை கலைப்பதற்காக முதலில் தடியடி நடத்தி பலனில்லாமல் போகவே கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் கூட்டத்தினர் கலைந்து செல்லாததைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மதுரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்ததுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மோதல், பற்றம் காரணமாக உசிலம்பட்டி பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications