'இலங்கை'-புதுச்சேரியில் மாணவர்கள் பிரமாண்ட ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரியி்ல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் இன்று மாபெரும் ஊர்வலம் நடத்தினர்
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தைப் போலவே புதுவையிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் காங்கிரஸ் அரசு பல போராட்டங்களுக்கு தடை விதித்தும் பலரை கைது செய்தும் வருகிறது. சமீபத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகுந்து ரகளயில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெரும் ரகளையும் அடிதடியும் ஏற்பட்டது. இதையடுத்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வெளியில் வர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளியது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது சாதாரண வழக்கு பதியப்பட்டது.
இந் நிலையில் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5,000 பேர் இன்று திரண்டு கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர்.
ஈழத்தமிழ் மக்களின் அவல வாழ்க்கையைச் சித்தரிக்கும் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடி கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.
இதில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி சேர்ந்த 2,500 மாணவிகளும், தாகூர் கல்லூரி உள்ளிட்ட அரசுக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் 2,500 பேரும் புதுச்சேரியின் காந்திவீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
ஆளுநரிடம் ஈழத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரி மனு அளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications