கூட்டணியை காக்க காங் எம்பி-எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
சென்னை: சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்டு திமுகவுக்கு நெருக்குதல் தர வேண்டும் என பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரல் எழுப்பலாம் எனத் தெரியவந்ததையடுத்து கட்சித் தலைமை இந்தக் கூட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்விட்டதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி கூடுகிறது. வழக்கமாக கூட்டத் தொடர் நடக்கும் அதே நாள் காலையில் தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சம்பிரதாயத்துக்காக நடக்கும்.
ஆனால், இந்தமுறை இன்றே கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி எம்பிக்களும் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டது.
இவர்கள் புலிகள், இலங்கை விவகாரம் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்டு ஏடாகூடமாக ஏதாவது தீர்மானம் போடலாம் எனத் தெரியவந்ததையடுத்து இந்தக் கூட்டத்தில் கட்சியின் மத்திய பார்வையாளர்களும் தமிழகத்தைச் சேர்ந்த 4 காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் பங்கேற்பர் என டெல்லி தலைமை அறிவித்தது.
இந் நிலையில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக காரசாரமாகப் பேசினால், அது சட்டமன்றத்திலும் எதிரொலித்து கூட்டணிக்கு உலை வைக்கும் என தெரியவந்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டம் வேறு தேதியில் நடக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
முன்னதாக தீவிர திமுக எதிர்ப்பாளரான காங்கிரஸ் மத்திய பார்வையாளர் அருண்குமார் நேற்று டெல்லியில், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்ற தலைமையின் கருத்தை வெளியிட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications