முதல்வர் வீட்டுக்கு பூச்சி மருந்துடன் வந்த பெண் - பரபரப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க வந்திருப்பதாக கூறிய பெண், மூட்டைப் பூச்சி மருந்தை கையில் வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டிற்கு செல்வதற்காக பிரேமா (34) என்ற பெண் இன்று காலை வந்தார். அவரை நிறுத்திய போலீஸார், யார், என்ன என்று விவரம் கேட்டனர்.
அப்போது, முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவிருப்பதாக அந்த பெண் கூறினார். ஆனால் அவரிடம் மனு எதுவும் இல்லை. இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் மூட்டைபூச்சி மருந்து மட்டுமே இருந்தது.
இதனால் முதல்வர் வீட்டுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சிக்கும் திட்டத்துடன் அவர் வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து போலீசார் அவரை ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது கணவர் வெற்றிவேல் வெளிநாடு செல்ல கடன் வாங்கி கொடுத்ததாகவும், வெளிநாடு சென்ற பிறகு தன்னை மறந்து விட்டார். மாமியார் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டியடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
முதல்வரிடம் இது குறித்து முறையிட்டு தனக்கு உதவி அளிக்கும்படி கேட்டு கொள்ளவே முதல்வரை சந்திக்க சென்றதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார்.
ஆனால் பூச்சி மருந்துடன் வந்ததால் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்ணால் முதல்வர் வீடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications