கைதிக்கு வெட்டு-போலீஸ் மீது மிளகாய்ப் பொடி தூவல்: துப்பாக்கிச் சூடு
கடலூர்: பழிக்குப் பழியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதியை 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸ்காரர் மீது மிளகாய்ப் பொடி தூவப்பட்டது. இதையடுத்து அவர் து்பாக்கிச் சூடு நடத்தவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கப்பியாம்புலியூர் அக்சனம்பாளையத்தை சேர்ந்தவர் இருசப்பன் (34). விழுப்புரம் வட்டாரத்தில் பிரபல ரவுடி. எல்லை தாண்டி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தாதாவாகவும் செயல்பட்டு வந்தார்.
2000-ம் ஆண்டு விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருசப்பன் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 17-ந் தேதி விழுப்புரம் மாவட்ட செசன்சு கோர்ட்டில் இருசப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இருசப்பன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இருசப்பனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் கால்வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு எலும்பு முறிவு தனி வார்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவருடன் மேலும் 4 பேர் அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இருசப்பனுக்கு காலில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்து இருந்தனர். இதையொட்டி அவரது உறவினர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்த வார்டு முன்பு ஆயுதப்படை போலீஸ்காரர் செந்தில் குமரன் துப்பாக்கியுடன் காவலுக்கு நின்று இருந்தார்.
அப்போது 2 பேர் அந்த வார்டுக்கு வந்தனர். இருவரும் திடீரென்று போலீஸ்காரர் செந்தில்குமரன் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர்.
பின்னர் போலீஸ்காரரை தள்ளி விட்டுவிட்டு இருசப்பனின் படுக்கையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். இருசப்பன் சுதாரிப்பதற்குள் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் செந்தில்குமரன் கண் எரிச்சலுடன் ஓடிச்சென்று அவர்களை தடுத்தார். அவரால் முடியவில்லை. உடனே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கி குண்டு குறி தவறி சுவரில் பாய்ந்தது. இந்த சம்பவத்தை பார்த்த நோயாளிகள் அலறியடித்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஓடினர். இருசப்பனை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மொத்தம் 4 பேர் இருசப்பனை தாக்க வந்து இருந்ததாகவும், 2 பேர் உள்ளே வந்து தாக்கியபோது மற்ற 2 பேர் வேறு ஒரு வார்டு முன்பு நின்று இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
தப்பி ஓடிய 4 பேரில் ஒருவன் பெயர் அறிவு, மற்றொருவன் நாராயணன் என்றும், புஷ்பராஜின் கொலைக்கு பழிக்குபழியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தலை மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த கைதி இருசப்பனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் தனி வேனில் ஏற்றிச்சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கண் எரிச்சலுடன் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் செந்தில்குமரன் கண் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications