கும்பகோணம் தீ-நினைவுச் சின்னம் திறப்பு

கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் கோர தீவிபத்து நடந்தது. இதில் சிக்கி 94 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என அரசுக்கு குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நினைவுச்சின்னம் அமைக்க பாலக்கரையில் இடமும், ரூ. 60 லட்சம் நிதியையும் அரசு ஒதுக்கியது.
இதையடுத்து பாலக்கரையில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி தொடங்கியது.
நினைவுத் தூண், தியான மண்டபம், அலங்கார விளக்குகள், பூங்கா, சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு சின்னத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்வையிட்டார். அங்கிருந்த தியான மண்டபத்தில் இறந்த குழந்தைகளின் பெயர்களுக்கு முன்பு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நினைவுத் தூணுக்கும் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அவர் சிறிது நேரம் பேசினார். அவரிடம் பெற்றோர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அவை பரிசீலிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications