பிஜி அனுமதி: மலை கிராம அரசு டாக்டர்கள் எச்சரிக்கை
கோவை: வருகிற கல்வியாண்டு முதல் நேரடி முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களை அரசு அனுமதிக்காவிட்டால், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் அரசு டாக்டர்கள் பணியாற்ற மாட்டார்கள் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு அரசு டாக்டர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில், மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சேர்ந்துள்ள டாக்டர்கள், 2 ஆண்டு சேவைக்குகப் பின்னர் முதுநிலைப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
ஆனால் அவர்கள் ஏற்கனவே எழுதிய தேர்வுகளின் முடிவே இன்னும் வெளிவராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு சிறப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்தாமல் உள்ளது. இதனால் பிஜி கனவுடன் உள்ள டாக்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் அரசு அமைதி காத்து வருகிறது. எனவே மலைப் பகுதிகளில், அரசின் உத்தரவாதத்தை நம்பி பணியில் சேர்ந்த டாக்டர்கள் ராஜினாமா செய்து விடலாமா என்ற யோசனையில் உள்ளனர் என்றார்.
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு பணியாற்றும் டாக்டர்களுக்கு, சிறப்பு நுழைவுத் தேர்வு மூலம் முது நிலைப் படிப்பில் சேர அனுமதிக்கப்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான இளநிலை டாக்டர்கள் அரசுப் பணியில் சேர்ந்தனர். ஆனால் அரசு சொன்னபடி நடக்கவில்லை என்று டாக்டர்கள் தற்போது குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்தால் மலைப் பகுதிகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக டாக்டர்கள் ராஜினாமா செய்தால், மலை கிராமங்களில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, சிறப்பு பிஜி அனுமதி தொடர்பாக அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications