தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - அனல் பறக்கும்
சென்னை: பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாளான நாளை, மறைந்த மதிமுக எம்.எல்.ஏ வீர. இளவரசனுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கு கிறது. திருமங்கலம் தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீர.இளவரசன் நேற்று மாரடைப்பால் காலமானதை யடுத்து, நாளைய முதல் நாள் கூட்டத் தில் வீர. இளவரசன் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப் பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு எடுக்கும். 5 நாட்கள் வரை அவை நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாளை கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, மின்சார பற்றாக்குறை-மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை வைத்து புயலைக் கிளப்ப அதிமுக உள்ளிட்ட கட்சிகள் காத்துள்ளன.
கடந்த கூட்டத் தொடரின்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தற்போது அங்கு இல்லை.
பாமகவை திமுக வெளியேற்றி விட்டது. இடதுசாரிகள், தாங்களாகவே திமுக எதிர்ப்பு நிலைக்கு மாறி விட்டனர். காங்கிரஸ் மட்டுமே திமுக அணியில் உள்ளது. இருப்பினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸும் சில கடுமையான நிலையை கையாண்டு வருவதால், இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கொண்டு வந்தால் இடதுசாரிகள் அதை ஆதரிக்கக் கூடும். ஆனால் தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என பாமக தெரிவித்து விட்டது. எனவே திமுக அரசுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நம்பப்படுகிறது.
கூட்டத்தொடரில் தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஆணையம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டதிருத்த ஆணை, விற்பனை வரிச் சட்டம் உள்ளிட்ட 10 அவசர சட்ட ஆணைகளுக்கான சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications