போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை: பிரதமருக்கு தா.பாண்டியன் கடிதம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப்படுகொலை தடுக்கப்பட வேண்டும் என்று தா.பாண்டியன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விடுதலைப் புலிகளுக்கும் இவர் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்யத் தயார் என அறிவித்துள்ளனர்.
இதை வரவேற்ற தா.பாண்டியன் தற்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தா.பாண்டியன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
நார்வே நாட்டின் முயற்சியால் 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை 2008ம் ஆண்டு ரத்து செய்ததாக இலங்கை அரசு அறிவித்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு மக்களுக்கு எதிரான போக்கை அந்த நாட்டு அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் மடிந்து வருகிறார்கள். அவர்கள் படும் வேதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. போரினால் தமிழர்கள் படும் பாடுகளை கேள்விப்பட்ட தமிழக மக்கள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அதிபரிடம் பேசி உடனடியாக போரை நிறுத்த நீங்கள் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனவே இலங்கை அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இலங்கையில் நடந்து வரும் போரினை நிறுத்த தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications