போர் நிறுத்தத்தை மீறியது இலங்கை தான்-வைகோ
கோவை: புலிகள் பலமுறை போர் நிறுத்தம் அறிவித்தும் அதை மீறியது இலங்கை அரசு தான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கைத் தமிழர்களைத் தாக்குவதற்கு ஆயுதம், ரேடார்கள், ராணுவ உதவி, மேலும் ராணுவ மேம்பாட்டுக்குக் கடன் என அந்த நாட்டுக்கு மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக ரூ. 2,000 கோடி கொடுத்து உதவி வருகிறது.
போர் நிறுத்தம் செய்யுமாறு அந்த நாட்டை மத்திய அரசு நிர்பந்திக்க மறுக்கிறது. புலிகள் பலமுறை போர் நிறுத்தம் அறிவித்தும் அதை மீறியது இலங்கை அரசு தான்.
ஆயுதங்களைக் கீழே போட புலிகள் தயார் தான். முதலில் இலங்கை ராணுவம் தனது ஆயுதங்களை கடலி்ல் போடட்டும். பின்னர் புலிகள் ஆயுதத்தை கீழே போடுவது குறித்து யோசிக்கலாம்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஒருவார கால தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடக்கின்றன. 16ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் நான் பங்கேற்கிறேன் என்றார் வைகோ.