சட்டக்கல்லூரி வன்முறை: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்னர், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வன்முறைச் சம்பவம் விவாதத்திற்கு வந்துத. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த வன்முறையை கடுமையாக கண்டித்துப் பேசினர்.
இது மிகவும் காட்டுமிராண்டித்தனமானது, காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது அதை விட மோசமானது என்று உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
அம்பேத்கரின் பெயரால் அமைந்த அரசு சட்டக் கல்லூரியின் விரும்பத் தகாத நிகழ்வு ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் நடந்த செய்தி கேள்விப் பட்டதுமே முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை அனுப்பி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
இரவு நெடுநேரம் எங்களுடனும், அதிகாரிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதனால் அவருக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர் சார்பில் பதிலளிக்கும் பொறுப்பு எனக்கு வந்துள்ளது.
வருங்காலத்தை உருவாக்கும் பொறுப்பில் உள்ள மாணவர் களிடையே இப்படிப்பட்ட வன்முறை நடந்தது கண்டிக்கத்தக்கதாகும். இவர்களே இப்படி நடந்துக் கொண்டால் வருங்காலத்தில் நீதி வழங்கும் பொறுப்பை ஏற்கும்போது இவர்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள்?
நானும் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தவன்தான். சட்டக் கல்லூரியில் இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் போலீஸ் அத்துமீறல் என்றுதான் பேசுவோம். ஆனால் இப்போது அவர்கள் மெத்தனமாக இருந்து விட்டார்கள் என்று பேசுகிறோம்.
நாங்கள் படிக்கும்போது அரசியல் ரீதியாகதான் தகராறு ஏற்படுமே தவிர ஜாதிய ரீதியாக மோதல்கள் ஏற்படாது. நடந்துவிட்ட சம்பவத்திற்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது.
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த பாரதிகண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை, சித்திரை செல்வன் ஆகிய 4 மாணவர்கள் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்டதாக மணிகண்டன், கோவிந்தன், மற்றொரு கோவிந்தன், ஜெய்குமார், பிரபாகரன் உள்ளிட்ட 7 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின்கீழ் வழக்கு தொடரப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதலை தடுக்க தவறிய கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வன்முறை தொடராத வண்ணம் தடுக்க சட்டக் கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து ஆய்ந்தறிந்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் போடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. ஜாதிய அடிப்படையில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு விசாரணை அறிக்கை கிடைத்ததும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை அரசு எடுக்கும் என்றார் அமைச்சர் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications