ஜனவரி முதல் விமானக் கட்டணம் மேலும் குறையும்!
மும்பை: கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்தைத் தொட்டாலும், விட்டதையெல்லாம் சம்பாதிக்கும் வரை பெட்ரோல் விலையைக் குறைக்க மாட்டோம் என ஒரு பக்கம் பெட்ரோலியத் துறை அடம் பிடிக்க, விமானப் பயணிகளுக்கு நற்செய்தி தெரிவித்துள்ளார் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல்.
அடுத்த ஜனவரியிலிருந்து விமானக் கட்டணங்கள் குறையும் என்று அறிவித்துள்ளார் அவர்.
விமானக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தவும், தனியார் விமானங்களின் நஷ்டத்தைக் குறைக்கவும் சமீபத்தில் ரூ.3000 கோடி வரையிலான பல சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு.
இதன் விளைவாக சர்வதேச விமானக் கட்டணத்தில் 1200 முதல் 10000 ரூபாய் வரை குறைந்தது. அதே போல உள்ளூர் விமான டிக்கெட்டுகளுக்கும் 350 முதல் 500 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் விமான எரி பொருட்களுக்கான விலை மேலும் குறைக்கப்பட உள்ளது. இதனால் வரும் ஜனவரி முதல் விமானக் கட்டணம் மேலும் 20 சதவிகிதம் வரை குறையக்கூடும் என பிரபுல் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம், பண்டிகைக் காலமான நவம்பர்- டிசம்பர் மாதங்களில் விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிகம். அதனால் இப்போது சற்றே குறப்பது போல பாவனை காட்டும் விமான நிறுவனங்கள், பயணிகள் வருகை மிகக் குறைவாக உள்ள ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் விமானக் கட்டணத்தைக் குறைத்து அதிக பயணிகளை ஈர்க்க முடிவெடுத்துள்ளன.
இது வழக்கமாக நடக்கும் 'விளையாட்டு'தான். ஆனால் பிரபுல் பட்டேல் புதிதாக இதற்கு வர்ணம் பூசப் பார்க்கிறார் என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications