அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி பரிசீலனை
அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் போட்டியில் பாரக் ஓபாமாவுடன் கடுமையாக மோதியவர் ஹில்லாரி. இருப்பினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்து பாரக் ஓபாமா தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ஓபாமாவின் அமைச்சரவையில் ஹி்ல்லாரிக்கு இடம் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை பொறுப்பை ஹில்லாரியிடம் கொடுக்க பாரக் ஓபாமா தீர்மானித்துள்ளாராம்.
ஹில்லாரி கிளிண்டன் வேட்பாளர் தேர்தலில் தோல்வியுற்றதால் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் நிலவும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும், இந்த நியமனம் போக்கும் என ஓபாமா கருதுகிறாராம்.
ஏற்கனவே துணை அதிபர் வேட்பாளராக ஹில்லாரி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோ பிடனைத் தேர்வு செய்தார் ஓபாமா. இதனால் ஹில்லாரி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் ஓபாமா மீதான அதிருப்தியும் அதிகரித்தது. இதையடுத்தே அனைவரையும் அமைதிப்படுத்தும் வகையில் ஹில்லாரியை, முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவு அமைச்சர் பொறுப்புக்கு ஓபாமா தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஹில்லாரி கிளிண்டன் சிகாகோ வந்துள்ளார். அவரிடம் ஓபாமா பேசினாரா என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் தனிப்பட்ட விஜயமாகவே ஹில்லாரி, சிகாகோ வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சிகாகோவில் உள்ள தனது அலுவலகத்தில் அமைச்சர்கள் நியமனம் குறித்து ஓபாமா தீவிர ஆலோசனையில் மூழ்கியுள்ளார்.
ஹில்லாரி கிளிண்டன் தவிர, மாசசூசட்ஸ் செனட்டர் ஜான் கெர்ரி, நெப்ரஸ்கா செனட்டர் சக் ஹேகல் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் அதிபர் தேர்தலுக்கு முன்பாக ஓபாமாவுக்கு ஆதரவாக திரும்பியவர்) ஆகியோரும் வெளியுறவுத்துறு அமைச்சர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ஓபாமா:
இதற்கிடையே அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமா, தனது செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஓபாமா. இப்பதவி 6 ஆண்டுகள் வகிக்கக் கூடியது. ஆனால் ஓபாமா செனட் உறுப்பினராகி ஒரு ஆண்டுதான் ஆகிறது. ஆனால் அதற்குள் அதிபராகி விட்டதால், விதிமுறைப்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஓபாமா வகித்து வந்த இடத்திற்கு, கருப்பர் இனத் தலைவர் ஜெஸ்சி ஜாக்சனின் மகன் ஜாக்சன் ஜூனியர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.