பாஸ்மதி பாக்கெட்டில் மறைத்து அபுதாபிக்கு அரிசி கடத்தல்!
அபுதாபி: தமிழகத்தை அரிசிக் கடத்தல் சமீப காலமாக கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடல் கடந்து அபுதாபி வரை அரிசிக் கடத்தல் தலைவிரித்தாடுவது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து தட்ஸ்தமிழ் வாசகர் குமார் என்பவர் நமக்கு விரிவான செய்தியை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து குமார் கூறுவதாவது...
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அரிசியைத் தவிர மற்ற வகை அரிசிகளை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நான் அபுதாபியில் உள்ள ஒரு இந்திய அரிசிக் கடைக்குச் சென்றிருந்தேன். பொன்னி அரிசி வாங்கவே நான் சென்றிருந்தேன். எப்படியாவது பழைய அரிசி ஸ்டாக் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்.
அப்போது 25 கிலோ பொன்னி அரிசி இருக்கிறதா என்று கேட்டபோது, கடைக்காரர் 25 கிலோ பாஸ்மதி அரிசி மூடையைக் கொடுத்தார்.
அதன் மேல் புறம், இந்தியன் பிரீமியர் பாஸ்மதி ரைஸ் என போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நான், கேட்டது பொன்னி அரிசியைத்தானே, பாஸ்மதி அரிசியைக் கொடுக்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு கடைக்காரர், உள்ளே பொன்னி அரிசி இருக்கிறது என்றார்.
ஒன்றும் புரியாமல் நான் எனது குடியிருப்புக்குச் சென்று அங்கு அரிசி மூடையைப் பிரித்துப் பார்த்தேன். அப்போது அதில், இன்னொரு பிளாஸ்டிக் பை இருந்தது. அதில், பொன்னி ரா ரைஸ் என போடப்பட்டிருந்தது. பிறகுதான் இந்த அரிசி பாஸ்மதி அரிசி என்ற பெயரில் கடத்தி வரப்பட்ட அரிசி என்பது எனக்குப் புரிந்தது.
இந்தியாவுக்குள்தான் இதுவரை அரிசிக் கடத்தல் இருந்து வந்தது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு அரிசி கடத்துவது சகஜமாக உள்ளது. ஆனால் இது சர்வதேச அளவுக்கு இப்போது பரவியிருப்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் அந்த கடத்தல் பொன்னி அரிசியின் விலை, 6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் வாங்கிய விலையை விட 2 மடங்கு அதிகமாகும்.
இந்த அரிசிக் கடத்தலால் பயனைடவது, சில ஏற்றுமதியாளர்களும், தரகர்களும்தான். என்னைப் போன்ற வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பலனும் கிடையாது. மாறாக அதிக விலை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் என்னைப் போன்ற இந்தியர்கள் குறிப்பிட்ட வகை அரிசிகளையே பயன்படுத்துகிறோம். மாற்று அரிசிக்கு மாற வேண்டுமானால், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் பிற நாட்டு அரிசிகளைத்தான் நாங்கள் வாங்க வேண்டியுள்ளது.
இப்படி எல்லை கடந்து வியாபித்துள்ள அரிசிக் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?