கோவை இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி கடும் கண்டனம்!
கோவை: நீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை வள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தேவராஜ். இவர் தனது மனைவி பரிமளத்துடன் சேர்ந்து வெட்கிரைண்டர் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேவராஜிக்கு எதிராக கோவை பீளமேடு காவல் நிலையத்தில் பரிமளா புகார் செய்தார்.
அந்தப் புகாரின் பேரில் தேவராஜ் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால், அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந் நிலையில், வழக்கு விசாரணையின் போது தேவராஜை கைது செய்ய மாட்டோம் என போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் அந்த உறுதி மொழியை மீறி பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி கடந்த 7ம் தேதி தேவராஜை கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
அப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் விவரம் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் விளக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தேவராஜை ஜாமீனில் விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறி தேவராஜ் கைது செய்யப்பட்டது குறித்து உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கோவை போலீஸ் உதவிக் கமிஷனர் மற்றும் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து பீளமேடு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது நீதிபதி சுதந்திரம், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கண்மூடித்தனமாக செயல்படக் கூடாது என்று கூறி அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தோடு எச்சரிக்கையும் விடுத்தார்.












Click it and Unblock the Notifications