ஆண்டவன் சொன்னால் ரஜினி ஆதரவு-பாஜக
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் தேர்தல் பிரசாரம் செய்வதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான மனதை ஆண்டவன் அவருக்கு வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறினார்.
நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னையில் சட்டக் கல்லூரி வாளகத்தில் நடக்க இருந்த மோதல் குறித்து அரசுக்கு ஏற்கனவே தெரிந்த பிறகும், அதை துவக்கத்திலேயே தடுக்கவில்லை.
பயங்கர செயல்கள் போலீசார் கண் எதிரே நடந்த போதிலும் அதை தடுக்க முயற்சி மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. சட்டக்கல்லூரி மாணவர்களே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வேதனையானது. யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவில்லை
ஓட்டு மொத்த போலீஸ் துறையின் செயல்பாடு சரியில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைத்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் அகில இந்திய பாஜக தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது அதன் அருகே திகவினர் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு போலீஸார் எப்படி அனுமதி தந்தனர்?
அதே போல பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சட்டம்-ஓழுங்கு கெட்டுவிட்டதற்கு இந்த ஒரு செயலே போதும்.
தமிழக போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை கண்டித்தும், சட்டம் ஓழுங்கு கெட்டு விட்டதை கண்டித்தும் என் தலைமையில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் அத்வானி- ரஜினி சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. பொதுவாக அத்வானியுடன் பலமுறை ரஜினி பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான மனதை ஆண்டவன் அவருக்கு கொடுக்க வேண்டும் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications