அமெரிக்காவில் இந்திய சி.இ.ஓ கொலை - சீனர் கைது

கலிபோர்னியாவில் உள்ள சிபோர்ட் என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றியவர் சித் அகர்வால் (56). இவரும், இந்த நிறுவனத்தின் மனித வளப் பிரிவு தலைவர் மெரிலின் லூயிஸ் (67), துணைத் தலைவர் பிரையன் பூக் (47) சமீபத்தில் சுட்டுக் கொ்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் ஜியாங் ஹுவா வூ என்பவர் சிக்கியுள்ளார். சான்டா கிளாரா போலீஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தியர் உள்ளிட்ட 3 அதிகாரிகளைக் கொன்றதாக இவர் மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிபோர்ட் நிறுவனத்தில்தான் வூ முன்பு வேலை பார்த்து வந்தார். சமீபத்தில்தான் அந்த வேலையிலிருந்து இவர் நீக்கப்பட்டார். நிதி நெருக்கடியால் சிபோர்ட் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்து அவர் சித் அகர்வால் உள்ளிட்டோரைக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட சித் அகர்வால், கம்ப்யூட்டர் துறையில் 25 ஆண்டு அனுபவம் நிறைந்தவர். அடோப், இன்டெல், பெல் லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
கான்பூர் ஐஐடியில் மின் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் இன்னொரு முதுநிலைப் படிப்பை முடித்தார்.
கடந்த மாதம்தான் வேலையிழந்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் தனது மனைவி, 3 மகன்கள், மாமியாரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் உலகளாவிய நிதி நெருக்கடியால் வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவர், இந்திய அதிகாரியை கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் வேலைக் குறைப்பில் வெகு வேகமாக இறங்கியுள்ளன. இதனால் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து வேலையிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது கொலை, தற்கொலை ஆகிய பாதைக்கு இட்டுச் சென்று வருவது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications