தாத்தா வீட்டில் ரூ. 18.5 லட்சம் கொள்ளையடித்த பேரன் கைது
சென்னை: தாத்தா வீட்டு பீரோவை உடைத்த பேரன் அதில் இருந்த ரூ. பதினெட்டரை லட்சம் பணத்தைக் கொள்ளையடித்தார். தாத்தாவைக் கொலை செய்யும் நோக்குடனும் அவர் இருந்துள்ளார். ஆனால் தாத்தா தூங்கிக் கொண்டிருந்ததால், கொலை திட்டத்தை விட்டு விட்டாராம்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. 79 வயதாகும் இவர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு யசோதா என்ற மனைவி, 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
பிள்ளைகளுக்குக் கல்யாணமாகி விட்டது. சொந்த வீட்டில், துரைசாமியும், அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அவர்களுடன் இளைய மகன் சீனிவாசன், மனைவி கவிதாவுடன் தங்கியுள்ளார்.
தனது வீட்டை விற்க முடிவு செய்தார் துரைசாமி. இதற்காக ஒருவரிடம் விலை பேசினார். ரூ. 62 லட்சத்திற்கு வீட்டுப் பேரம் முடிந்தது. இதையடுத்து முன்பணமாக ரூ. 30 லட்சத்தை வாங்கிய துரைசாமி அதிலிருந்து ரூ. 10 லட்சத்தை மகன் சீனிவாசனுக்குக் கொடுத்தார். ரூ. 18.5 லட்சம் பணத்தை பீரோவில் வைத்தார்.
இந்த நிலையில் பீரோவில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் திடுக்கிட்டார் துரைசாமி. பீரோவும் உடைக்கப்படாமல், அதிலிருந்த பணமும் காணாமல் போனதால் திடுக்கிட்ட அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். தனி்ப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. இதில் துரைசாமியின் மகள் தையல்நாயகியின் மகன் கார்த்திக் அடிக்கடி வீட்டுக்கு வந்து போனது தெரிய வந்தது.
இதையடுத்து கார்த்திக்கைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், கார்த்திக்தான் தனது நண்பர்கள் ஸ்ரீதர், பிரபு ஆகியோருடன் சேர்ந்து பணத்தை திருடியது தெரிய வந்தது.
கொள்ளையடித்த பணத்தை செந்தாமரை என்பவரின் வீட்டிலிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஜாலியாக ஊர் சுற்ற பணம் திருட்டு:
உல்லாசப் பேர்வழியான கார்த்திக், நண்பர்களுடன் எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பாராம். தாத்தா வீடு விற்ற பணத்தை வீட்டில் வைத்திருக்கும் தகவல் அவருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து தாத்தாவை தாக்கியோ அல்லது கொலை செய்தோ அந்தப் பணத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டார்.
இதனால் தாத்தா மட்டும் வீட்டில் இருக்கும் நேரத்தை நோட்டமிட்டு ஸ்ரீதர், பிரபுவுடன் வந்தார் கார்த்திக். வீட்டுக்கு வெளியே நண்பர்களை வைத்து விட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார்.
அப்போது துரைசாமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து தனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு விட்டு பணத்தை மட்டும் நைசாக எடுத்துக் கொண்டு நழுவியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications