இந்தோனேஷியா: பயங்கர பூகம்பம்-ஒருவர் பலி, சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலாவேசி தீவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
கொரண்டாலோ மாகாணத்தில் உள்ள க்வான்டாங் கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கி 56 வயது மதிக்கத்தக்க நபர் இதில் பலியானார். ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 23 பேர் காயமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த பூகம்பம் தாக்கியது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அங்கு தொடர்ந்து பீதி நிலவுகிறது
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications