மாலேகான் குண்டு: நாசிக் கொண்டு செல்லப்பட்ட புரோஹித்

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்து தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புரோஹித்தும் ஒருவர்.
இவரை கைது செய்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், விசாரணைக்காக மும்பை கொண்டு வந்திருந்தனர். போலீஸ் காவல் மற்றும் சிறைக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாசிக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரை அங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலை நீட்டிக்க போலீஸார் கோரவுள்ளனர்.
முதலில் இன்று காலை புரோஹித்தை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
நவம்பர் 5ம் தேதி புரோஹித் கைது செய்யப்பட்டார். மாலேகான் குண்டுவெடி்ப்பு தவிர சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் இவரது பெயர் அடிபடுகிறது. பகவான் என்பவருக்கு 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை இவர் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பகவான் மூலம் தீவிரவாதிகளுக்கு வெடிபொருள் கை மாறியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பகவான் யார் என்பது குறித்தும், அவரைப் பிடிப்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை பிரக்யா சிங் தாக்கூர், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சுவாமி அமிர்தானந்த் என்கிற தயானந்த பாண்டே, சமீர் குல்கர்னி, ஜெகதீஷ் மாத்ரே, ராகேஷ் தாவ்டே, அஜய் ரஹீர்கர், ஷாம்லால் பவர் சாஹு, சிவநாராயன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications