சட்டக் கல்லூரி வன்முறை: மேலும் 4 மாணவர்கள் கைது
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக மேலும் நான்கு மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறை தொடர்பாக தலைமறைவாகியுள்ள மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஓரிருவர் சரணடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வரை 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று காலை சென்னையில் மாக்ஸ் என்ற ரவீந்திரன், குபேந்திரன், மணிமாறன், வெற்றிக்கொண்டான் ஆகிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய இடத்தில் வைத்து இவர்களை விசாரித்த போலீஸார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்கள் தவிர செல்வகுமார், வேல்முருகன் ஆகிய 2 மாணவர்களும் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தனர். வேல்முருகன் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
செல்வகுமார் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரத்தை சேர்ந்தவர்.
இவர் நேற்று காலை திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் முன் சரண் அடைந்தார்.
செல்வக்குமாரின் தந்தை அண்ணாத்துரையை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் பிடித்து சென்று விசாரித்து வந்தனர். இந்த நிலையில் செல்வக்குமார் சரணடைந்துள்ளார்.
சட்டக்கல்லூரி கலவரம் தொடர்பாக இதுவரை 24 மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் 3 மாணவர்கள் கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள்.
இன்னும் 15 பேர் சிக்காமல் உள்ளனர். அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நெல்லை-தூத்துக்குடியில் தேடுதல் வேட்டை:
இதற்கிடையே இந்த மோதலில் தொடர்புடைய மேலும் பல மாணவர்களைப் பிடிக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
இதற்காக அமைக்கப்பட்ட 20 தனிப் படைகளி்ல் 2 போலீஸ் படையினர் நெல்லை, தூத்துக்குடி வந்துள்ளனர். இதுகுறித்து ஒரு படையின் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் கூறுகையில்,
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்தில் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த மாணவன் முருகேசனுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாணவன் அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பது வீடியோ ஆதாரத்தில் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை கைது செய்ய வந்துள்ளோம். வாசுதேவநல்லூர் மாணவன் முருகேசனை கைது செய்துள்ளோம்.
அசோக்குமாருக்கு ஒரு அரசியல் கட்சியில் ஈடுபாடு உள்ளதால் அந்த அமைப்பை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றோம். விரைவில் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து செல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications