இலங்கை-பாஜக வந்தால் 6 மாதங்களில் தீர்க்குமாம்!
சென்னை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சுனாமி பாதிப்பிற்கு பிறகு, கடலோரத்தில் தடுப்புச் சுவர் கட்டப்படவில்லை. அதனால்தான் காசிமேடு பகுதியில் கடல் கொந்தளிப்பால் சேதம் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ராஜபாளையத்தில் 28ம் தேதி பாஜகவின் மாநில ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு புறக்கணித்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இழுக்காகும்.
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிடுவதற்கு எல்லா வகையிலும் உரிமை உண்டு. இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவது யானைப் பசிக்கு சோளப்பொரி மாதிரி தான்.
நிவாரணப் பொருட்களை நாம் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்க முடியாது.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் மக்களை அந் நாட்டு அரசு மரியாதையோடு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். போர் முடிந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றி பேசியதற்காக வைகோவை கைது செய்தார்கள். அப்படிப் பார்த்தால் சிமி' இயக்கம் பற்றி பேசியதற்காக லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங், அமர் சிங் ஆகியோரை கைது செய்ய வேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதுபோல 6 நாட்களில் ராமர் பாலம் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்படும்.
பாஜக தலைவர் அத்வானிக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே மரியாதை கலந்த நட்பு உள்ளது. அத்வானி சென்னை வந்தபோது திடீர் ஏற்பாடாகத்தான் அவர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது ரிஷிகேஷ் பயணம், சினிமா, பொதுவிஷயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டார்கள்.
சென்னையில் முன்னாள் மத்திய மந்திரி சத்ருகன் சின்காவும், ரஜினிகாந்தும் சந்தித்து பேசிக் கொண்டதற்கும் அத்வானி-ரஜினிகாந்த் சந்திப்பிற்கும் தொடர்பு இல்லை. இருவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்.
ரஜினிகாந்த் தனது ஆரம்ப நாளில் சத்ருகன் சின்காவை ரோல் மாடல் என்று கூறியிருக்கிறார். இவர்கள் சந்திப்பில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை.
தொலைத் தொடர்புத் துறையில் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு பிரச்சனையில் மத்திய அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்து, தன்மீது குற்றம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு மீண்டும் பதவியை ஏற்கலாமே?
டிசம்பர் 15ம் தேதிக்குப் பிறகு எம்.பி. தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது தொடர்பான முயற்சி விரைவுபடுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications