இலங்கை-போர் நிறுத்தம் கோரி வைகோ உண்ணாவிரதம்
சென்னை: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் நடந்த போராட்டத்தி்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லியில் போரை நிறுத்த முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் 7 கோடி தமிழர்களின் உணர் வுகளை மத்திய அரசு மதிக்க வில்லை. போர் தீவிரமடையும் என்று தைரியமாக ராஜபக்சே அறிவிக்கிறார். இதற்கு மத்திய அரசுதான் காரணம்.
இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தவில்லை. இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டுவது, உணவு பொருட்கள் வழங்குவது, எம்.பி.க்கள் ராஜினாமா ஆகியவை நாடகமாகும்.
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசு தான். ஆயுதங்களை வழங்கி விடுதலைப்புலிகளை அழித்து வருகிறது. இதன் மூலம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.
மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் போர் நிறுத்தப்படும். ஆனால் அதை செய்ய மத்திய அரசு தயங்குகிறது. போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களை ஒன்று திரட்டி வருகிறோம். தமிழக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது நடக்காது.
இந்த போரில் இலங்கை அரசு வெற்றி பெற முடியாது. எல்லா தாக்குதலையும் அவர்கள் எதிர்கொள்ள கூடியவர்கள். எந்த இழப்பையும் ஈடுகட்டி வெற்றி பெறக் கூடியவர்கள்.
இலங்கையில் போரை நிறுத்த சொல்லி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் அரசியல் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்டு நடத்தும் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. இணைந்து போராடும்.
ஆயுதம் ஏந்தி போராட சொன்னால் அது ராஜதுரோகமா? திரும்ப திரும்ப சொல்கிறேன். அது தவறு இல்லை என்றார்
வைகோ.
உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications