கேரளாவுக்கு எதிராக தமிழக எல்லையில் போராட்டம்
செங்கோட்டை: தமிழக கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு முதல் புனலூர் வரை புதிய சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் திடீரென இந்தப் பணியை கேரள அரசு ஒத்தி வைத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆரியங்காவு கிராமத்தில் பொதுமக்கள் நாளை கடையடைப்பு, கண்டன பேரணி, மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தப் பாதையில் சென்று வரும் நிலையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளும், பல்லாயிரக்கணக்கான கார், லாரி, ஜீப், ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் ஆகியவை கேரள பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அங்கிருந்து தமிழகம் வரும் மக்களும் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனால் செங்கோட்டை-புனலூர், நெல்லை-புனலூர், தென்காசி-புனலூர் ஆகிய இரு முனை ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது.
இவ்வளவு சிக்கல் இருந்தும் கூட போராட்டக் குழுவினரிடம் போலீசார்-அதிகாரிகள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications