கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல்: 'கபீல் அகமதே காரணம்'
லண்டன்: கிளாஸ்கோ குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த கபீல் அகமதே காரணம் என இந்த வழக்கு தொடர்பாக கைதான ஈராக் டாக்டர் பிலால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்பில் வெடிகுண்டுகளை நிரப்பி தாக்க முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த கபீல் அகமது தீக்காயமடைந்தார். முன்கூட்டியே குண்டுவெடித்ததால் வி்மான நிலையம் பெரும் ஆபத்திலிருந்து தப்பியது.
ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கபீல் அகமது, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லா கைது செய்யப்பட்டார். இவரும் கபீல் அகமதுவுடன் ஜீப்பில் இருந்தவர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பும் கபீல் அகமதுதான் என்று டாக்டர் பிலால் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், கபீல் அகமதுவும், மத்திய லண்டனில் உள்ள டைகர் நைட்கிளப்புக்கு வெளியே இரண்டு மெர்சிடிஸ் கார்களில் குண்டுகளை வைத்து நிறுத்தினோம்.
இருப்பினும் ஈராக் குறித்த இங்கிலாந்தின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இதை செய்தோம். குண்டை வெடிக்க வைக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை.
எள்லோரும் என்னைத் தீவிரவாதி என்கிறார்கள். ஆனால் நான் தீவிரவாதி இல்லை. வன்முறையைப் பயன்படுத்தி நான் இங்கிலாந்து அரசுக்கு, ஈராக் குறித்த சிந்தனையை மாற்ற முயற்சித்தேன்.
நாங்கள் மக்களைக் கொல்லவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ நினைத்திருந்தால் அந்த வழியில் போயிருப்போம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை.
லண்டன் சம்பவத்திற்குப் பின்னர் பாரீஸ் சென்று அங்கிருந்து ஈராக் போக திட்டமிட்டிருந்தேன். ஈராக் போய் விட்டால் யாரும் எங்களைப் பிடிக்க முடியாது என்பதால் அந்தத் திட்டத்தில் இருந்தேன்.
கபீல்அகமது லிவர்பூல் போக திட்டமிட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
லண்டன் சம்பவத்திற்குப் பின்னர் அடுத்த நாள் காலை அகமது என்னை எழுப்பினார். கிளாஸ்கோ செல்ல நேரமாகி விட்டதாக கூறினார். ஆனால் அப்போது எனக்கு நல்ல தலைவலி. என்னால் வர முடியுமா என்று தயக்கத்துடன் தெரிவித்தேன்.
இருப்பினும் அவர்தான் என்னை அவசரப்படுத்தி கிளப்பி அழைத்துச் சென்றார் என்று கூறியுள்ளார் பிலால் அப்துல்லா.