தமிழகம் போதும்-மராட்டியர்களுக்காக போராட ரஜினிக்கு தாக்கரே அழைப்பு

மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கர்நாடகத்தில் பிறந்து, வளர்ந்து, இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாகவும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமாகவும் திகழும் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வரவே தயக்கம் காட்டினாலும், அரசியல்வாதிகள் அவரை விடுவதாக இல்லை.
இந்த நிலையில் இப்போது பால் தாக்கரே, ரஜினியை மராட்டியர்களுக்காகப் போராட மும்பை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சாம்னா இதழில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது...
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழர்கள் படும் அவலங்களைக் கண்டித்தும், துயரங்கள், வேதனைகளை மதித்தும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இதை நான் வரவேற்கிறேன், ரஜினியைப் பாராட்டுகிறேன். இதை நான் பிராந்தியவாதமாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முழுமையான தேசியவாதம். இப்படித்தான் இருக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்களுக்காக ரஜினி காந்த் கவலைப்படுகிறார். அதேபோல இலங்கைத் தமிழர் பிரச்சினையி்ல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர்.
இவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.
ஆனால் இதேபோன்ற பிரச்சினையை நாங்கள் மகாராஷ்டிராவில் எழுப்பினால் மட்டும், தேசத்தை உடைக்கப் போவதாக குற்றம் சாட்டுகின்றனர். தமிழர்கள் பிரச்சினைக்காக செய்யும்போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அதுவே மராட்டியர்களின் உரிமைகளுக்காக போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுகிறார். நாங்கள் மராட்டியர்களுக்கு வேலை வாங்கித் தருவதற்காக போராடுகிறோம். தமிழர்களின் உரிமைகளிலும், மராட்டியர்களின் உரிமைகளிலும் வேறுபாடு உள்ளதா.
மராட்டியம் உருவாக 105 பேர் இன்னுயிர் ஈந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தைப் போல ஒருவர் இன்னும் மராட்டியத்திற்குக் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் பணிகள் முடிந்து விட்டன. அவர் மராட்டியத்திற்கு வந்து மராட்டியர்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.












Click it and Unblock the Notifications