அதிமுக விழாவில் சிறுவன் சாவு-நஷ்டஈடு உத்தரவு
சென்னை: அதிமுக நடத்திய விழாவின்போது, அமைக்கப்பட்டிருந்த அலங்கார வேலியிலிருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரை சேர்ந்த டீக்கடைக்காரர் கமலநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
அதிமுக அமைச்சராக இருந்த இந்திரகுமாரி சத்துணவு ஊழியர்கள் மாநாட்டிற்கு வேலூரில் ஏற்பாடு செய்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக விழாவுக்கு அழைத்தனர்.
இதனால் அப்பகுதியில் விழாக்கோலம் போல அலங்கரித்தனர். தெருவில் உள்ள மின்சார வயரிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து அலங்கார விளக்குகளுக்கு பயன்படுத்தினார்கள்.
6.12.95 அன்று ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் மாலையில் ஹெலிகாப்டரில் ஏறி சென்றார்.
இந்த சத்தத்தை கேட்டு எனது 9 வயதான மகன் தினகரன் வெளியில் வந்தான். ஒரு இடத்தில் அலங்கார வேலி சாய்ந்து கிடந்தது. அதில் உள்ள இரும்பு கயிறில் மின்சாரம் பாய்ந்ததால் எனது மகன் ஷாக்' அடித்து மரணம் அடைந்தான். காயம் அடைந்த நான் 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன்.
முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர் ரூ.10,000 மட்டும் வழங்கினார். ஆனால், ரூ.30,000 வரை கடன் வாங்கி செலவு செய்தேன். மின்சார வாரியம் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆகவே, எனது மகன் மரணத்திற்கும், நான் சிகிச்சை பெற்றதற்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மாவட்ட கலெக்டர் இதற்கு பதில் மனுவை தாக்கல் செய்தார். அரசியல் கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது என்றும், இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்றும் கூறினார்.
ஆனால், அந்த விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை. தெருவில் உள்ள மின்சார லைனிலிருந்து நேரடியாக மின்சாரத்தை அலங்கார விளக்குக்காக பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் இந்த மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே மனுதாரருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை ஏழரை சதவீத வட்டியுடன் 12 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications