பொருளாதார நிலை-வெள்ளை அறிக்கை கோரும் ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் நிதியமைச்சர் சிதம்பரம் நகைப்புக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். நுகர்வோரின் வாங்கும் சக்தியை அதிகரிக்க உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைக்குமாறு இந்திய தொழிலதிபர்களை நிதியமைச்சர் சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

ஆனால் தற்போதுள்ள சூழலில் விலைகுறைப்பு சாத்தியமல்ல என்று கூறி தொழிலதிபர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

மேலும் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகையையும் (சி.ஆர்.ஆர்.) மற்றும் சட்டப்படி வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகையையும் (எஸ்.எல்.ஆர்.) குறைத்து சிதம்பரம் எடுத்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத்தான் பணப் புழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது (!!).

வெளிநாட்டு சக்திகள் விரித்த சதி வலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பரிதாபகரமாக விழுந்துவிட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு சிறிய பயனைக்கூட சிதம்பரத்தின் நடவடிக்கைகள் தரவில்லை.

மாநில அளவில் மோசமான நிர்வாகத்தை கொண்டிருக்கும் திமுக அரசின் கடுமையான மின்வெட்டு காரணமாக கடைகளில் பொருட்கள் வாங்குவதுகூட இயலாத காரியமாகி விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள மோசமான கட்டமைப்பே தற்போதைய நிலைமைக்கு காரணம். இதனால் தொழில் உற்பத்தியில் தேசிய குறியீடு குறைந்துகொண்டே வருகிறது.

மத்திய அரசின் பொருளாதார மேலாண்மை மீது குறிப்பாக இந்திய பங்கு சந்தை பற்றி விடாப்பிடியாக கருத்து தெரிவிக்கும் சிதம்பரத்தின் மீது நாடு நம்பிக்கை இழந்துவிட்டது. அவர் சரிந்து கொண்டிருக்கும் பங்குச் சந்தையை தூக்கி நிறுத்துவதற்காக தன்னாட்சி அமைப்புகளான செபி மற்றும் இந்திய வங்கி செயல்பாடுகளில் குறுக்கிட்டு வருகிறார். ஆயினும் பங்கு சந்தை குறியீடு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

110 கோடி இந்திய மக்களின் அடிப்படைத்தேவைகளை புறந்தள்ளி விட்டு, இந்தியப் பொருளா தாரத்தின் உயிர்நாடியான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் சரிவை தூக்கி நிறுத்துவதற்காக கார்களின் விற்பனை, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் கட்டுமானத் தொழில் மீது சிதம்பரம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பங்குச் சந்தைக்குத்தான் தான் அமைச்சர் என்ற முறையில் சிதம்பரத்தின் போக்கு இருந்தது. பின்னர், நிலைமை மிகவும் சூடான பிறகு, செபி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் 'செய்தித் தொடர்பாளர்' என்ற புதிய பதவியை சிதம்பரம் ஏற்றார். தற்போது சில இந்திய நிறுவனங்களின் 'விற்பனைப் பிரதிநிதி' என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இது நமது நாட்டின் மோசமான பொருளாதார மேலாண்மை, தேசத்தை பற்றிய உண்மையான அக்கறை கொண்டிருப்பவர்களை கவலை அடையச் செய்துள்ளது.

பொருட்களை பதுக்கி வைக்கும் ஈவு இரக்கமற்ற கும்பலாலும், வரலாறு காணாத பெட்ரோலியப் பொருட்களின் உயர்வினாலும், சாதாரண மனிதனால் வாங்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது.

பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களை வெளியில் கொண்டு வருவதற்கோ அல்லது விலைவாசியை குறைப்பதற்கோ மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சர்வதேச பொருளாதாரச் சரிவை மத்திய அரசு ஏன் முன்கூட்டியே அறிந்து கொள்ளவில்லை?. இதனை எதிர்கொள்ளத் தேவையான திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை?

உலகப் பொருளாதாரமே சீர்குலைந்து நிலையற்றதாக இருக்கும்போது, பிரதமரும், நிதியமைச்சரும் இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஏன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்?.

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் பங்குச் சந்தையில் விடாப்பிடியாக கவனம் செலுத்தி வந்தது?

இதுபோன்ற விவகாரங்களை உள்ளடக்கிய தேசிய பொருளாதாரத்தின் மேலாண்மை குறித்து ஒட்டு மொத்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதனை வேடிக்கை என்று எண்ணி நிதியமைச்சர் நிராகரிக்காமல் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.இல்லை என்றால் எதிர்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+