மாலேகான் குண்டுவெடிப்பு: புனே என்ஜீனியரிடம் ஏடிஎஸ் விசாரணை
புனே: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜீனியர் ஷாம் ஆப்தே என்பவரிடம் இன்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இவர் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தில் ஒரு உறுப்பினர் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்திடம் நடத்தப்பட்ட நார்கோ சோதனையின்போது ஆப்தேவின் பெயரை அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே இன்று புனே, நவ் சஹாயத்ரி என்ற இடத்தில் உள்ள ஆப்தேவின் வீட்டுக்கு சென்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் ஆப்தே விசாரிக்கப்பட்டார்.
என்ஜீனியரான ஆப்தே, 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தியா திரும்பினார்.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ள சுவாமி தயானந்த பாண்டேவுக்கு பணம் ஏதும் கொடுத்தாரா, புரோஹித்துக்கும், ஆப்தேவுக்கும் உள்ள தொடர்புகள், ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர் இந்திரகுமார் என்பவரைக் கொல்ல நடந்த முயற்சியில் தொடர்பு உண்டா என்பது குறித்து ஆப்தேவிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் கைதான பாண்டேவின் லேப்டாப்பில் ஆப்தேவின் பெயர் இடம் பெற்றிருந்தது. மேலும் புரோஹித்திடம் நடந்த விசாரணையின்போதும் அவர் ஆப்தேவின் பெயரைக் குறிப்பிட்டார். மேலும், ஆப்தே, இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தில் உறுப்பினராக இருப்பதால் அவரை சந்தேக வளையத்திற்குள் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.
பலமுறை பாண்டே புனே வந்துள்ளார். அப்போதெல்லாம் ஷாமை சந்தித்துள்ளார். பாண்டேவை, புரோஹித்தான் ஷாமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாராம்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்கள் ஷாம் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் ஷாமுக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி அவர் பேச மறுத்து விட்டார். இருப்பினும் அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
அவர்கள் கூறுகையில், ஷாம் ஆப்தேவுக்கும், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இருப்பினும், சாதாரண உறுப்பினராக ஒருமுறை 'ஷாக்கா' கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.
நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நீதித்துறை, ஒருபோதும் அநீதி இழைக்காது என நம்புகிறோம். விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications