ஜெ மியூசிக்குக்கு நான் டான்ஸ் ஆட முடியாது-ராஜா
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.
4, 5 பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து கொண்டு ஒரு 'கார்ட்டல்' போல செயல்பட்டு வந்தன. இதை நான் உடைத்தேன். புதிய நிறுவனங்களை நுழையச் செய்து மக்களுக்கு மேலும் குறைந்த கட்டணத்தில் தொலை தொடர்பு சேவை கிடைக்க வழி செய்தேன்.
இதைத் தான் திசை திருப்பி என் மீது குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த நிறுவனத்துக்கும் ஆதரவாக நடக்கவில்லை. தேவையில்லாமல் இதை அரசியலாக்குகிறார்கள்.
பொதுவாக மத்திய கண்காணிப்பு ஆணையமான சி.வி.சி. எல்லா அமைச்சகங்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது வழக்கமானது தான்.
அந்த வகையில் தான் இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் விளக்கம் கோரப்பட்டது. அதற்கான விளக்கம் தரப்பட்டுவிட்டது.
என் அமைச்சகத்திற்கும் கடிதம் வந்தால், அதற்கான பதிலை இந்தத் துறையின் செயலாளர் அனுப்புகிறார். நான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது கூட அம்மாதிரி கடிதம் வந்து, அதற்குரிய பதிலை செயலாளர் அனுப்பியிருக்கிறார்.
ஆனால், இப்போது எதையெடுத்தாலும் பத்திரிகைகள் குற்றச்சாட்டு போல எழுதுகின்றன. தமிழகத்தில் இம்மாதிரி செய்திகளுக்கு என் படத்தையும் சேர்த்து போட்டு விடுகின்றனர். ஆனால், இம்மாதிரி கடிதங்களுக்கு நாங்கள் அனுப்பும் பதிலைப் பற்றி செய்தி போடுவதில்லை.
யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. மூன்றாம் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு பற்றி அடுத்த கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவரது மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications