உடன்குடியில் 1600 மெகாவாட் மின் நிலையம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியமும், மத்திய அரசின் பாரத மிகு மின் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறனுள்ள 2 யூனிட்களை கொண்ட அனல் மின் திட்டம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.8,700 கோடி.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கடந்த அக்டோபர் 26ம் தேதியன்று தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசு நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறனுள்ள 2 யூனிட்களை கொண்ட அனல் மின் திட்டம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.8,700 கோடி.
இத் திட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் பிற நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இத் திட்டத்திற்கான முக்கிய இயந்திரங்கள், பி.எச்.இ.எல். நிறுவனத்திடம் இருந்து பெறப்படவுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் இத் திட்டத்தை செயல்படுத்தி மின் நிலையத்தை இயக்கும்.
இத் திட்டத்திற்கான கூட்டு நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூட்டு நிறுவனத்திற்கு, உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு முயற்சி வரைவு ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான கூட்டு நிறுவன ஒப்பந்தம் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தமிழ் நாடுமின் வாரியத்தின் தலைவர் மச்சேந்திரநாதன் மற்றும் பாரத மிகு மின் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
இத் திட்டத்திற்கு உடன்குடி கிராமத்தில் 760 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் கண்டயறிப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்படி நிலத்தில் திட்டம் தொடர்பான பணிகளை செய்வதற்கு நுழைவு அனுமதியை வழங்கியுள்ளது. கள ஆய்வு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத் திட்டத்திற்கான நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் என்பதால் கடலில் தளம் அமைப்பதற்கான ஆய்வு செய்யும் பணியை ஐ.ஐ.டி. சென்னை நிறுவனம் செய்து அறிக்கை வழங்கியுள்ளது. இத் திட்டத்தின் முதல் யூனிட் மார்ச் 2012ம், 2வது யூனிட் செப்டம்பர் 2012ம் இயக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications