பாங்காங்கில் மாபெரும் போராட்டம்-ராணுவப் புரட்சி பீதி

பாங்காக்: தாய்லாந்தில் பிரதமர் சோம்சாய் வோங்சாவத்துக்கு எதிராக மக்களின் போராட்டம் திடீரென வலுத்துள்ளது. பிரதமர் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாங்காக் விமான நிலையத்தையும் பல்வேறு அரசு கட்டடங்களையும் முற்றுகையிட்டுள்ளனர்.
இதையடுத்து பிரதமர் பதவி விலகிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என ராணுவத் தளபதி அனுபோங் பாவ்ஜின்டா கோரியுள்ளார். அதே நேரத்தில் முற்றுகைப் போராட்டத்தை மக்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் தாய்லாந்தில் ராணுவ ஆட்சி வந்துவிடுமோ என்ற அச்சம் பரவியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் நீக்கப்பட்டார் பிரதமர் தஸ்கின் ஷினாவத்ரா. இதையடுத்து அவர் தப்பி ங்கிலாந்துக்கு ஓடினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் சோம்சாய். ஆனால், அவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. அவர் தஸ்கினின் கைப்பாவை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து அவரை பதவி விலகக் கோரி கடந்த மே மாதம் மக்கள் ஜனநாயகக் கூட்டணி என்ற அமைப்பு போராட்டத்தைத் துவக்கியது. இதற்கு பெருவாரியான மக்களின் ஆதரவும் கிடைத்துவிட்டது.
இதனால் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
இந் நிலையில் பெரு நாட்டுக்கு அரசுமுறை பயணமாகச் சென்றார் சோம்சாய். இதையடுத்து பாங்காங்கின் சர்வதேச விமான நிலையமான ஸ்வர்ணபூமி விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களை மக்கள் ஜனநாயகக் கூட்டணி முற்றுகையிட்டது.
இதையடுத்து தனது பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் சோம்சாய். ஆனால், அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேற விடாமல் தடு்க்கும் வகையில் மக்கள் ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் 3 நாட்களாக இந்த முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, விமான நிலையத்தில் இரு குண்டுவெடிப்புகளும் நடந்துவிட்டன. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த முற்றுகையால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் விமான நிலையத்திலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந் நிலையில் மூத்த ராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்களை சந்தித்த ராணுவத் தளபதி பாவ்ஜின்டோ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
பிரதமர் உடனே ராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக அவருக்கு கடிதம் அனுப்பப்படும்.
நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கவில்லை. இன்னும் கூட இந்த அரசு முழு அதிகாரத்தில் உள்ளது. ஆனால், மக்களின் முழு எதி்ர்ப்பை சம்பாதித்துவிட்ட பிறகு ஆட்சியில் நீடிப்பது பிரதமருக்கு நல்லதல்ல.
நான் ராணுவப் புரட்சி நடத்தினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஆனால், அதன் எதிர்மறை விளைவுகள் கடுமையாக இருக்கும். சர்வதேச அளவி்ல் நாடு தனிமைப்படுத்தப்பட்டுவிடும். அதை நான் விரும்பவில்லை.
அதே நேரத்தில் நாடு ஸ்திரமற்ற நிலையை அடைவதை ஏற்க முடியாது. முற்றுகைப் போராட்டத்தை மக்கள் உடனே கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்றார்.
மக்கள் ஜனநாயகக் கூட்டணியை நடத்துவது முன்னாள் ராஜ பரம்பரையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications