கடும் பாதுகாப்பு வளையத்தில் சென்னை
சென்னை: மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத் தலைநகர் சென்னை பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் தங்கியுள்ள விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கு தங்கியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். நகரின் முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில் வந்தவர்களின் விவரங்கள் கேட்டறியப்பட்டன.
கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் கமாண்டோ மற்றும் அதிரடிப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் நுழைவாயில்களில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது.
இதேபோல கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் பலத்த பாதுகாப்பு:
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியின் அனைத்து நுழைவாயில்களிலும் தீவிர கண்காணிப்பு, வாகனத் தணிக்கை நடைபெறுகிறது.
விமான நிலையம், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலக வளாகங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கடும் கண்டனம்:
உலகெங்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நேரத்தில், இந்தியாவில், மும்பையில் நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நேரத்தில்இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றிருப்பது மிக வருத்தமாக உள்ளது.
இச்சம்பவத்தில் உயிர் நீத்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications