பலி 183 ஆனது: 22 வெளிநாட்டினர்-4 ஏகே 47கள் மீட்பு
மும்பை: மும்பையில் 63 மணி நேரம் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 300 ஆகியுள்ளது.மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் 26 உடல்கள் கிடக்கின்றன. இவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இது குறித்து மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் குமாவத் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில்,
பலியானவர்களில் 22 பேர் வெளிநாட்டினர், 16 பேர் மும்பை போலீசார், 2 பேர் என்எஸ்ஜி கமாண்டோக்கள், இருவர் ஹோம் கார்டுகள்.
காயமடைந்தவர்களில் 23 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
பலியான வெளிநாட்டினரில் 3 பேர் இஸ்ரேலியர்கள், 3 பேர் ஜெர்மனைச் சேர்ந்தவர்கள், 2 பேர் கனடாவை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து, இங்கிலாந்து, மொரீசியஸ், சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவர். பலியான மேலும் 5 வெளிநாட்டினர் குறித்த விவரம் தெரியவில்லை.
9 தீவிரவாதிகள் சாவு:
இந்த தாக்குதலை நடத்திய 9 தீவிரவாதிகள் சுட்டு்க் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவன் உயிரோடு பிடிபட்டுள்ளான்.
ஓபராய் ஹோட்டலில் இரு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு 7.62 எம்எம் பிஸ்டல்கள், 8 மேகசீன்கள், 3 கையெறி குண்டுகளும், மொபைல் போன்கள்,
நரிமன் ஹவுசில் 2 ஏகே 47கள், 9 மேகசீன்கள், 2 பிஸ்டல்கள், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
தாஜ் ஹோட்டலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
டைம்ஸ் பெண் நிருபரும் பலி:
டைம்ஸ் ஆப் இந்தியாவின் பெண் நிருபரான சபீனா செகல் சைக்கியாவும் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியாகிவிட்டார். அவரது உடல் தாஜ் ஹோட்டலின் 6வது மாடியில் கிடந்தது.
இவர் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து அங்கிருந்தபடியே டைம்ஸ் நெள தொலைக்காட்சிக்கு தகவல் தந்து வந்தார். திடீரென அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிரதமர் ஆலோசனை:
இந்தத் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி, பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சி்ங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் ரா, ஐபி, மும்பை போலீசார், கடற்படையின் உளவுப் பிரிவு ஆகியவை கொடுத்த அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்ட அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு பாகி்ஸ்தான் அரசிடமே தரப்படவுள்ளது.
இந்த அறிக்கையை அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நேச நாடுகளிடமும் தர இந்தியா முடிவு செய்துள்ளது.
அதே போல உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் இன்று கடற்படை, கடலோரக் காவல் படை, ஐபி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் நாட்டின் கடலோரக் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்:
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்து அப்போது ஆலோசிக்கப்படவுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு டெல்லி, 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.