5 தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டவர்?-ஒருவன் ஏமனி
லண்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய 5 பேர் இங்கிலாந்து நாட்டுக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் பிரிட்டனின் பிரான்போர்ட் நகரின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இங்கிலாந்தில் நடந்த பஸ் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதலில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள் ஈடுபட்டது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில்,
மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய சிலர் இங்கிலாந்து நாட்டவரா என்பது குறித்து உடனடியாக கூற முடியாது. அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டில் தீவிரவாதிகள் செயல்படும்போது, அவர்களுக்ககு வேறு நாட்டிலிருந்து ஆதரவு கிடைக்கலாம் அல்லது வேறு நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுறுவியும் வரலாம்.
இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்களின்போது இந்தியாவும், இங்கிலாந்தும் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டியது இப்போது மிகவும் முக்கியமாகும்.
தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தும் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் சம்பவம் மிகவும் அராஜகமானது. இந்திய அதிகாரிகளுக்கு உதவ இங்கிலாந்து மெட்ரோ போலீஸ் துறையிலிருந்து சில நிபுணர்கள் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இந்திய அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளன. அவற்றை விரிவாக ஆராய வேண்டியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதுகுறித்து அவருடன் நான் பேசுவேன் என்றார் பிரவுன்.
இதற்கிடையே இந்த தீவிரவாதிகளை அடையாளம் காண மத்திய உளவுப் பிரிவினரும் இங்கிலாந்தின் உளவுப் பிரிவான MI5 அமைப்பும் இணைந்து விசாரணையை ஆரம்பித்துள்ளன.
ஏமன்:
இந் நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இன்னொரு தீவிரவாதி ஏமனைச் சேர்ந்தவன் என்று மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொரீசியஸ் நாட்டவரும்..?:
மேலும் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பையில் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் ஐடி கார்டும் கிடந்தது. இதனால் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மொரீசியஸைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் பையில் ஏராளமான சீன கிரனைடுகள், அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய், 7 கிரெடிட் கார்டுகளும் சி்க்கின.
கமாண்டோக்கள் சுட்டதில் பலியான தீவிரவாதிகளின் உடல்களை பரிசோதனை செய்தபோது இவர்கள் அனைவருமே போதை மருந்தை செலுத்தியிருந்ததும் தெரியவந்ததாகவும் மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.