மும்பை-ஆட்டோமொபைல் துறைக்கு மேலும் அடி!
டெல்லி: ஏற்கனவே விற்பனையில் படுத்துக் கிடக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு, மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் இன்னொரு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறை, பெருகி வரும் வட்டி விகிதங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக ரிவர்ஸ் கியரில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வெடிகுண்டைப் போட்டது போல மும்பை தீவிரவாதத் தாக்குதல் வந்து சேர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த கார் விற்பனையில், மும்பையின் பங்கு மட்டும் 7 சதவீதமாகும். இங்கு மாதத்திற்கு 7000 கார்கள் விற்பனையாகின்றன.
அதிலும் மாதக் கடைசியில்தான் பெரும்பாலான விற்பனை இருக்கும். ஆனால் இந்த மாதக் கடைசியில் தீவிரவாதிகள் புகுந்து பெரும் நாசம் ஏற்படுத்தி விட்டதால் கார் விற்பனை மகா மந்தமாகி விட்டதாம். கிட்டத்தட்ட கார் விற்பனையே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
இதுகுறித்து ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆட்டோமொபைல் துறைக்கு இது மிகப் பெரிய அடியாகும். எங்களது முக்கிய மார்க்கெட்டாக மும்பை உள்ளது.
தீவிரவாதத் தாக்குதலால் ஆட்டோமொபைல் பிரிவுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும். வர்த்தகமும் தேக்க நிலையை சந்தித்துள்ளது என்றார்.
ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில், மும்பைக்கு வர வேண்டாம் என எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.
எங்களது தயாரிப்புத் தொழிற்சாலை புனேவில் உள்ளது. எனவே மும்பை வழியாக புனே செல்வதை தவிர்க்குமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். நேரடியாக புனே செல்லுமாறும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
அக்டோபர் மாதம் பயணிகள் கார் விற்பனை 6.59 சதவீதமாக குறைந்திருந்தது. மொத்தமே 98 ஆயிரத்து 900 கார்கள்தான் விற்பனையாகின. அதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 877 கார்கள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications