தீவிரவாத தாக்குதலால் ரூ. 4000 கோடி இழப்பு
இதுகுறித்து அசோசம் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில், மும்பையில் தீவிரவாதிகள் புகுந்த நிமிடம் முதல், கமாண்டோப் படையினர் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்த நிமிடம் வரை நகரில் உள்ள ஹோட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தன.
இதனால் ஒரு நாளைக்கு குறைந்தது ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். மொத்தமாக ரூ. 4000 கோடி அளவுக்கு மும்பைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் வியாழக்கிழமையன்று மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச், தேசிய ஸ்டாக் எக்சேஞ்ச், கமோடிட்டி எக்சேஞ்ச் ஆகியவை மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன.
அடுத்த நாள் பல நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டாலும் கூட குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர்.
மும்பை, தேசிய பங்குச் சந்தை மற்றும் கமோடிட்டி பங்குச் சந்தை ஆகியவற்றின் தினசரி நிதி புழக்கம் ரூ. 32 ஆயிரத்து 710 கோடியாகும்.
மேலும் இந்திய சினிமாவின் தலைநகரமாகவும் மும்பை விளங்குகிறது. சினிமா படப்பிடிப்புகள், டிவி படப்பிடிப்புகள் என கடந்த 3 நாட்களாக படப்பிடிப்புகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் சினிமாத் துறைக்கு மட்டும் ரூ. 10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தியேட்டர்களும் மூடிக் கிடந்தன. இதனால் தியேட்டர்காரர்கலுக்கு ரூ. 8 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிவி தொடர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
மொத்தத்தில் 3 நாட்கள் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தால் பல ஆயிரம் கோடி இழப்பையும், நூற்றுக்கணக்கான இன்னுயிர்களையும் மும்பை மாநகரம் பறிகொடுத்துள்ளது.













Click it and Unblock the Notifications