தீவிரவாதிகளின் உடல் அடக்கத்திற்கு இடம் தரக் கூடாது: முஸ்லீம் அமைப்பு
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களை இந்தியாவில் எங்குமே அடக்கம் செய்ய யாரும் இடம் தரக் கூடாது இஸ்லாமிய அமைப்பான இந்திய முஸ்லீம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜமா மஸ்ஜித் அறக்கட்டளைக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ஜமா மஸ்ஜித் அறக்கட்டளைதான் தெற்கு மும்பையின் மிகப் பெரிய அட்ட ஸ்தலத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கவுன்சிலின் செயலாளர் சர்பிராஸ் அர்ஸூ கூறுகையில், மும்பையில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களையம் மும்பையில் உள்ள எந்த அடக்க ஸ்தலத்திலும் அடக்கம் செய்ய அனுமதிக்க்க கூடாது என ஜமா மஸ்ஜித் அறக்கட்டளையை கோரியுள்ளோம்.
9 பேரும் மிகக் கொடூரமான, இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரான செயலில் ஈடுபட்டவர்கள். எனவே அவர்களை இஸ்லாமியர்கள் என்று கூறவே கூடாது. அவர்கள் உண்மையான முஸ்லீம்களே இல்லை என்றார்.
ஜமா மஸ்ஜித் அறக்கட்டளை நிர்வாகி ஹனீப் நல்கான்டே இதுகுறித்துக் கூறுகையில், இந்திய இஸ்லாமிய கவுன்சிலின் கடிதம் கிடைத்துள்ளது. கேட்பாரற்ற உடல்களுககான அடக்க செலவுகளை பொதுவாக எங்களது அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளாது.
இருப்பினும் இஸ்லாமிய விதிப்படி, ஒரு முஸ்லீம் அட்ட ஸ்தலம், எந்த முஸ்லீமின் உடலையும் அடக்கம் செய்வதை தடுக்க முடியாது. இறந்த நபர் கொலையாளியோ அல்லது கற்பழிப்புக் குற்றத்தை இழைத்தவரோ அல்லது வேறு மாதிரியான குற்றம் செய்தவரோ, யாராக இருந்தாலும் உடல் அடக்கத்தை தடுக்க முடியாது. எனவே உடல் அடக்கத்திற்காக உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டால் நாங்கள் அதைத் தடுக்க மாட்டோம் என்றார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அடக்க ஸ்தலம் உள்ள பகுதியின் மூத்த இன்ஸ்பெக்டர் ஜெயந்த் சர்முகதம் கூறுகையில், வழக்கமாக நாங்கள் கேட்பாற்ற உடல்களை அறக்கட்டளையிடம் ஒப்படைப்போம். ஆனால் இலவசமாக உடல் அடக்கத்தை செய்ய அறக்கட்டளை முன்வராவிட்டால், அரசே செலவு செய்து அந்த உடலை அடக்கம் செய்யும் என்றார்.