திருட்டு வழக்கு: கைதைத் தவிர்க்க நிர்வாண கோலத்திற்கு மாறிய பெண்
சென்னை: வடிவேலு படத்தில் வருவதைப் போல, போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் தடுக்க ஆடைகளைக் களைந்து போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஒரு பெண்.
ஒரு படத்தில் ஏட்டையாவாக வருவார் வடிவேலு. ஒரு பெண் குற்றவாளியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குப் போவார். அந்தப் பெண்ணோ, தனது உடைகளைக் களைந்து விட்டு இப்போ வந்து கைது செய்து பார் என ஏட்டையா வடிவேலுவுக்கு சவால் விடுவார்.
அதேபோன்ற சம்பவம் சென்னையில் நிஜமாகவே நடந்துள்ளது.
அமைந்தகரை காந்தி நகரில் வசிப்பவர் நாகவல்லி (30). இவர் சூளைமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டில் 5 சவரன் தங்க நகைகளும், 13 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் திருடு போனது. நாகவல்லிதான் திருடியதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார்.
இதன் பேரில் நாகவல்லியிடம் விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்த நாகவல்லி உடனடியாக தனது ஆடைகளை களைந்து போலீசார் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சமாளித்துக் கொண்டு, அக்கம்பக்கத்தில் வசித்த பெண்களை துணைக்கு அழைத்து நாகவல்லிக்கு ஆடைகளை உடுக்க வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது.
இதற்கு முன்னர் இன்னொரு வீட்டிலும் நாகவல்லி வேலை பார்த்தபோது அங்கும் திருட்டு வேலையில் இறங்கியுள்ளார்.
அப்போது பிடிபட்டவுடன் தனது ஆடைகளை களைந்து வீட்டு உரிமையாளர் தன்னை தவறான நோக்கத்திற்கு அழைத்ததாக கூறி தப்பித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நாகவல்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications