பாகிஸ்தானை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்: மன்மோகன் சிங்
டெல்லி: மும்பைத் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமுதாயம் நெருக்குதல் தர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் மன்மோகன் சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பிராந்தியத்தை தீவரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கொடிய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் நிர்ப்பந்தம் செய்ய வேண்டும்.
உலக அமைதிக்கு தீவிரவாதம் பெரும் மிரட்டலாக உருவெடுத்திருப்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவின் இந்த செய்தி, சமீபத்தில் டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸிடமும் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் இழைத்த தீவிரவாதிகளை தண்டிப்பதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்.
மும்பை சம்பவம் தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்ட அனைத்து உலக நாடுகளின் தலைவர்களிடமும் இதுகுறித்து நான் வலியுறுத்திக் கூறியுள்ளேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா கோபத்துடனும், காயத்துடனும் இருப்பதாக அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
இந்த கொடிய குற்றத்தை இழைத்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதுதான் நான் அனைவருக்கும் விடுக்கும் செய்தி என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications