விமான நிலைய துப்பாக்கிச் சூடு: பீதியில் கன்வேயர் பெல்ட்டில் ஏறி தப்பிய பெண்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்ததாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டின்போது, பீதி அடைந்த ஒரு பெண் பயணி, லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தின்போது விமான நிலையத்தில் பயணிகள் பீதியடைந்து ஓடியுள்ளனர். அப்போது ஒரு பெண் சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தப் பெண் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கன்வேயர் பெல்ட் மீது ஏறி விட்டார். இதைப் பார்த்த நாங்கள் அவர் லக்கேஜ் சேகரிக்கும் இடம் வரை வருவதற்கு அனுமதித்தோம். அதன் பின்னர் மின் இணைப்பைத் துண்டித்தோம். அந்த இடத்தில் அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக இறக்கி விட்டனர்.
கன்வேயரை பாதியிலேயே நிறுத்தியிருந்தால், அவரை மீட்பது சிரமமாயிருக்கும். எனவேதான் லக்கேஜ் சேகரிப்பு இடம் வரை வர அனுமதித்தோம்.
கன்வேயர் பெல்ட்டில் ஏறி வந்ததால் அந்தப் பெண்ணுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications