வெள்ள பகுதிகளைப் பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு
சென்னை: தமிழக மழை, வெள்ள சேதத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழு சென்னை வந்தது. 2 குழுக்களாகப் பிரிந்து வெள்ள சேதத்தை அவர்கள் பார்வையிடுகின்றனர்.
சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிஷா புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பல லட்சக்கணக்கான நெற் பயிர்கள் நாசமடைந்தன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் பெரும் சேதத்தை சந்தித்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வெள்ள சேதத்தைப் பார்வையிட மத்திய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று மத்திய அரசு நிபுணர் குழுவை நேற்று அனுப்பி வைத்தது.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஸ்கந்தன் தலைமையிலான நிபுணர் குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். ஸ்கந்தன் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தமிழகத்தில் கலெக்டராகவும் இருந்துள்ளார். அவரது தலைமையிலான குழுவில் 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று காலை தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் தலா நான்கு பேராக பிரிந்து, தலா 2 மாவட்டங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர். 2 நாட்களுக்கு இந்த ஆய்வு நடைபெறுகிறது.
வியாழக்கிழமை தங்களது ஆய்வை முடித்து விட்டு சென்னை திரும்பும் நிபுணர் குழு தமிழக அரசிடமிருந்து பெற்ற அறிக்கை மற்றும் தங்களது அறிக்கையுடன் டெல்லி திரும்புகிறார்கள். உள்துறை அமைச்சகத்திடம் தங்களது அறிக்கையை அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications