கொடி நாள்: தாராள நிதியளிக்க கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரை: கொடிநாள், நம் இந்தியாவை உலகுக்கு அடையாளப்படுத்தும் நமது தேசியக் கொடியைப் போற்றும் திருநாள்.

வடபுலத்தே பனி படர்ந்த இமயமலை, எஞ்சிய முப்புறங்களிலும் விரிந்து பரந்துள்ள கடல்வெளிகள். இந்த எல்லைப் புறங்களைக் காப்பதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடும் போதும், இன்னுயிர் ஈந்தும், இடுக்கண் பல ஏற்றும், சொல்லொணாத் தொல்லைக்கு முப்படை வீரர்கள் ஆட்படுகின்றனர்.

அவர்களைக் களத்துக்கு அனுப்பி விட்டுக் கனத்த இதயத்தோடு இல்லங்களில் காத்திருக்கும் இதயங்களுக்கும், "நாங்கள் இருக்கிறோம், உங்களைக் காக்க, நாடிருக்கிறது உங்கள் நலம் பேண' என நம்பிக்கையளித்திடும் நாள், இந்தக் கொடிநாள். தமிழகம் வீரத்தை மதித்துப் போற்றும் மாநிலம். வீரர்களைப் பாராட்டி வாழ்த்தும் பண்புடைய மாநிலம்.

இந்தியாவில் எந்த மாநிலமும் வழங்காத அளவில் தமிழக மக்கள் சார்பில் அதிகமாக பாதுகாப்பு நிதி அளித்தது போலவே, ஆண்டுதோறும் கொடிநாள் நிதி வழங்குவதில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகமே முதலிடத்தில் உள்ளது. இது, தமிழக மக்களின் நாட்டுப்பற்றை, மனிதநேயத்தை உலகுக்கு பறைசாற்றும் நல்ல அடையாளங்கள்.

இதை மீண்டும் மெய்ப்பிக்க நமக்கு வாய்ப்பை வழங்கும் நாள் இந்த ஆண்டின் கொடிநாள். தமிழக மக்கள் வழங்கும் கொடிநாள் நிதி, நமது முப்படை வீரர்களின் நலன்களைக் காக்க பல்வேறு வகையிலும் பயன்படுகிறது. இந்த நிதியில் இருந்து, உலகப் போர் நிகழ்ந்த போது, அதில் பணியாற்றி, இன்று வறியநிலையில் வாடும் முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழக இளைஞர்கள் அதிகளவில் படைப் பணியில் சேருவதை ஊக்குவிக்க, ராணுவத்துக்கு ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வில் பங்கு பெற விரும்புவோருக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறோம். பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் அளிப்பதில், தமிழக அரசு வழங்கும் நிதியோடு மக்கள் அளிக்கும் கொடிநாள் நிதியும் பெரிதும் பயன்படுகிறது.

வரும் ஆண்டுகளிலும் முன்னாள் படைவீரர் குடும்பங்களின் நல வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உண்டு என்ற உணர்வோடு கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி உதவிடுவீர் என்றார் கருணாநிதி.

முன்னதாக நேற்று ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவப்படை வீரர் கொடி நாள் நிதியை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை இயக்குனர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை துணை இயக்குனர் அஸ்லாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+