பொன்சேகாவின் திமிர்-கருணாநிதி கண்டனம்
ென்னை: தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கை ராணுவ தளபதி தமிழக அரசின் தலைவர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: அப்படி இலங்கை தளபதி சொல்லி இருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது.
இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் அடிப்படையில் ஒருவரை பற்றி மற்றொருவர் விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழக தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்த காலத்திலும் ஏற்க முடியாது. அப்படி விமர்சித்திருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கேள்வி: இதை நீங்கள் பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: இலங்கை ராணுவ தளபதி கூறியது பத்திரிகையில் வந்துள்ளது. ராமதாஸ் கூறிய கருத்தும் இந்நேரம் பிரதமருக்குத் தெரிந்திருக்கும்.
கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த பிரணாப் முகர்ஜி எப்போது செல்கிறார்?
கருணாநிதி: இன்னும் தேதி குறிப்பிடவில்லை.
கேள்வி: போர் நிறுத்தம் செய்ய இந்தியா வற்புறுத்தாது என இலங்கை அமைச்சர் கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: சர்வ கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இலங்கைக்கு சென்று நமது கோரிக்கை வலியுறுத்தவும், போர் நிறுத்தம் பற்றிய கோரிக்கையை வலியுறுத்தவும் இந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ள செய்யவும் இலங்கைக்கு செல்ல வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேள்வி: கடந்த முறை வெள்ள நிவாரணத்துக்கு நாம் கேட்ட தொகையில் 10ல் ஒரு பங்குகூட மத்திய அரசு ஒதுக்கவில்லையே?
கருணாநிதி: சென்ற முறை வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்டதை மத்திய அரசு வழங்கவில்லை. இந்தமுறை அவ்வாறு இல்லாமல் நாங்கள் கேட்கும் நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கூறியிருக்கிறோம். அதனால் நாங்கள் கோரிய அளவு நிதி வழங்கு வார்கள் என நம்புகிறேன்.
கேள்வி: மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும்போது தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
கருணாநிதி: அதுபற்றி எனக்கு தெரியாது. வாய்ப்பு இருந்தால் மகிழ்ச்சி தான்.
கேள்வி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது என்று கூறுகிறார்களே?
கருணாநிதி: எனக்குப் போதும்.
கேள்வி: அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்ன ஆகும்?
கருணாநிதி:- அது விரைவில் சட்டமாகும். அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து இன்னொரு துணை கமிட்டி அமைத்து இருந்தோம். அந்த கமிட்டி கூடி இன்று அறிக்கை கொடுத்துள்ளது. எனவே மிக விரைவில் அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் கொண்டு வரப்படும்.
கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறதே?
கருணாநிதி: இப்போது இல்லை.
கேள்வி: மத்திய அரசிடம் இருந்து ஒதுக்கப்படும் மின்சாரம் கிடைக்கவில்லையே?
கருணாநிதி:- 2000 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். அது வரவில்லை. அதுபற்றி அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. டிசம்பரில் 1000 மெகாவாட் மின்சாரமும், ஜனவரி மாதம் 1000 மெகாவாட்டும் தருவதாக கூறி இருக்கிறார்கள் என்றார்.