10 தீவிரவாதிகளும் பஞ்சாப்தான்!
மும்பை: மும்பையில் நவம்பர் 26ம் தேதி தாக்குதல் நடத்திய பத்து தீவரவாதிகளும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மும்பை போலீஸாரிடம் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் அமீன் கஸாப் போலீஸாரிடம் பல முக்கியத் தகவல்களை கக்கியுள்ளான்.
மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பத்து தீவிரவாதிகள் குறித்த தகவல்களும் படிப்படியாக வெளியாகி வருகின்றன.
கஸாப் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டம் பரீத் கோட் கிராமத்தைச் சேர்ந்தவன் என்ற தகவல் முதலில் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று கஸாப்பின் குடும்பத்தினரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், மற்ற 9 பேர் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
10 பேரில் கஸாப் உள்ளிட்ட 3 பேர் ஓகாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் முல்தானைச் சேர்ந்தவர்கள். 2 பேர் பைசலாபாத், மற்ற இருவரில் ஒருவர் சியால்கோட் மற்றும் இன்னொருவர் தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டங்கள் அனைத்தும் பஞ்சாப் மாநிலத்தில்தான் உள்ளன.
இந்தக் குழுவின் தலைவராக செயல்பட்டவர் இஸ்மாயில் கான். கஸாப்புடன்தான் இருந்தார் இஸ்மாயில் கான். ஆனால் கஸாப்பை மட்டுமே உயிருடன் போலீஸாரால் பிடிக்க முடிந்தது. இஸ்மாயில் கொல்லப்பட்டு விட்டார்.
இஸ்மாயில் கான் கையில் இருந்த 9 எம்எம் பிஸ்டலை போலீஸார் பறிமுதல் செய்தனர். அது பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகும். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவராம் இஸ்மாயில்கான்.
தற்போது போலீஸ் பிடியில் உள்ள கஸாப், தனது தந்தைக்கு கடிதம் எழுத அனுமதிக்க வேண்டும் என கோரி வருகிறானாம். தான் செய்தது தவறுதான், தன்னை தவறான பாதைக்குத் திருப்பி விட்டனர் என்று எனது தந்தையிடம் கூற வேண்டும் என கூறி வருகிறானாம் கஸாப்.
கஸாப்புக்கு மூளைச் சலவை செய்து, தீவிரவாதப் பயிற்சிகளை அளித்தது அபு ஹம்சா என்ற லஷ்கர் தீவிரவாதி எனத் தெரிய வந்துள்ளது. இந்த அபு ஹம்சாவுக்கு, பெங்களூர் இந்திய அறிவியல்க கழகத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.