இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த அரவாணிகள்
சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரி தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த அரவாணிகள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், தமிழர்களை இலங்கை அரசு 2ம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது.
சொந்த நாட்டைச் சேர்ந்த மக்களையே அது பல ஆண்டுகளாக கொன்று குவித்து வருகிறது.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க போரை நிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் கூட அதை இலங்கை அரசு மதிக்காமல் உள்ளது.
தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் வேகத்தில் இலங்கை ராணுவம் செயல்பட்டு வருகிறது. எல்லோரையும் அழித்து விட்டு யாருடன் பேசப் போகின்றன இலங்கை ராணுவமும், அரசும்?
பொதுப் பிரச்சினைக்காக குரல் கொடுத்ததோடு, உண்ணாவிரதப் போராட்டத்திலும் அரவாணிகள் ஈடுபடுவது மிகவும் பாராட்டுதலுக்குரியது என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications