மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் விவரம் வெளியீடு
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தகவல்களை மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
யார், யார்?
இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்கள் வருமாறு ...
படா அப்துல் ரஹ்மான் (முல்தான்), சோட்டா அப்துல் ரஹ்மான் (முல்தான்), பஹாதுல்லா என்கிற அபு பாஹத் (ஓகாரா), இஸ்மாயில் கான் என்கிற அபு இஸ்மாயில் (தேரா), ஜாவேத் என்கிற அபு அலி (ஓகாரா), நஸீர் என்கிற அபு உமர் (பைசலாபாத்), பாபர் இம்ரான் என்கிற அபு அகாஷா (முல்தான்), இன்னொரு நசீர் என்கிற அபு உமர் (பைசாலாபாத்), அஜ்மல் அமீன் கஸாப் (ஓகாரா), சோயீப் என்கிற சொயப் (நரோவால் சியால்கோட்).
இவர்களில் சிலரின் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், சிலரது அடையாள அட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் கஸாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் கமாண்டோக்களால் கொல்லப்பட்டவர்கள்.
எங்கெங்கு யார் யார் தாக்கியது?
இவர்களில் இஸ்மாயில் கான் மற்றும் கஸாப் சத்ரபதி ஆகியோர் சிவாஜி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.
படா அப்துல் ரஹ்மான், ஜாவேத், சோயப், நஸீர் என்கிற அபு உமர் ஆகியோர் தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.
இன்னொரு நஸீர் என்கிற அபு உமர், பாபர் இம்ரான் ஆகிய இருவரும் நாரிமன் ஹவுஸில் தாக்குதல் நடத்தினர்.
சோட்டா அப்துல் ரஹ்மான், பஹாதுல்லா ஆகியோர் டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.
இவர்களில் சோயப்புக்கு வயது 20 தான். தீவிரவாதிகளிலேயே இவன்தான் மிகவும் சிறியவன். நஸீர் தான் அதிக வயதானவன். இவனுக்கு வயது 28.
நஸீர் மட்டுமே இந்தக் கும்பலில் திருமணமானவன். ஆனால் இவனது மனைவி, இவனுடன் இல்லை. ஒன்று விவாகரத்து செய்திருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
தீவிரவாதிகளின் சராசரி வயது 23 முதல் 25 வயதுக்குள்தான்.
இஸ்மாயில்கான், நசீர், நஸீர் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே பல தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்.
கும்பலின் தலைவன் இஸ்மாயில்
இந்தக் கும்பலின் தலைவனாக இஸ்மாயில்கான் செயல்பட்டுள்ளான்.
பயிற்சியின்போது இவர்கள் அனைவருக்கும் வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் அடையாளம் காண்பதில் குழ்பம் ஏற்படும் என்பதற்காக இந்த புனை பெயர்கள் தரப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்குள்ளாகவே உண்மையான பெயர்கள் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த புதுப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள நான்கு இடங்களில் இந்தக் கும்பலுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கராச்சியிலிருந்து கிளம்பி மும்பைக்கு வரும் வழியில் கிடைத்த 3 நாட்களில்தான் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து விரிவாகப் பேசிக் கொண்டுள்ளனர். அப்போதுதான் அவர்களுடைய உண்மையான பெயர்களையும் முதல் முறையாக அறிந்து கொண்டுள்ளனர். தாங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அஜ்மலுக்கு மட்டும் மூளைச்சலவை
அஜ்மல் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் மூளைச் சலவை தனியாக தரப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளைக் கையாளும் பயிற்சி தரப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்களில் உள்ளவை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. ஜிபிஎஸ் தவிர ஒரு சாட்டிலைட் போன், 9 செல்போன்களும் தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் ஒரு சிம் கார்டு கொல்கத்தாவில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை தீவிரவாதிகள் மும்பையில் பயன்படுத்தியுள்ளனர். மற்ற சிம் கார்டுகள் குறித்த தகவல்களை இப்போது வெளியிடுவதற்கில்லை.
சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக 2 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.
சபாவுதீனையும் விசாரிக்க முடிவு
இவர்கள் தவிர இந்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சபாவுதீன் என்ற தீவிரவாதியையும் போலீஸ் கஸ்டடியில் எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார் மரியா.













Click it and Unblock the Notifications