வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு இன்றும் ஆய்வு
தஞ்சை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் மத்திய நிபுணர் குழு 2வது நாளாக ஆய்வு நடத்துகிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கடும் மழையால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
இதனால் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு முதல் கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாவது கட்டமாக ரூ.500 கோடியும் ஒதுக்கியது. மத்திய அரசு முதல்கட்ட நிதி உதவியாக ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஸ்கந்தன் தலைமையில் வந்துள்ள மத்திய நிபுணர் குழுவில், மத்திய திட்டக் குழுவின் மூத்த ஆலோசகர் முரளீதரன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மனோஜ் குமார், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் சுப்பிரமணியம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று காலை தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பிற்பகலில் திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை அவர்கள் பார்வையிட்டார்கள். தஞ்சை மாவட்டத்தில் சுமார் இரண்டேகால் லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தது.
மாநில அரசு ஏக்கருக்கு ரூ.7,500 நஷ்டஈடு அறிவித்து மிக குறைவான தொகை என்றும், அதற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
பின்னர் நாளை சென்னை திரும்பும் மத்திய குழுவினர் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications