முகர்ஜி அடுத்த வாரம் இலங்கை செல்கிறாராம்!
டெல்லி: இலங்கையில் போர் நிறுத்துவது குறித்து வலியுறுத்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் கொழும்பு செல்வார் எனத் தெரிகிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கடந்த 4ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கும்படி கோரினர்.
அப்போது வழக்கம்போல் பிரதமர் எந்த உறுதிமொழியும் தராமல் அமைதி காத்தார். தமிழக தலைவர்கள் தான் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்த வேண்டும் என்று கோரினர்.
இதை பிரதமர் ஏற்றுக் கொண்டார். ஆனால், பிரணாப் எப்போது கொழும்பு செல்வார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதை மத்திய அரசு அப்படியே கிடப்பில் போட்டுவிட வாய்ப்புண்டு என்பதால் நேற்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
அப்போது இன்னும் 5, 6 நாட்களில் கொழும்பு செல்கிறேன் என்று பிரணாப் உறுதியளித்தாக பாலு பின்னர் நிபருபர்களிடம் தெரிவித்தார்.
இதன்படி அடுத்த வாரத்தில் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லலாம் எனத் தெரிகிறது.
டெல்லி சென்று பயனில்லை-ராமதாஸ்:
இதற்கிடையே தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் சிங்கள அரசே போரை நிறுத்து' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
இந்திய அரசு இலங்கையில் நடக்கிற தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும். ஆனால் இந்திய அரசு நினைக்கவில்லை. முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று பிரதமரிடம் பேசிய போது இதனை புரிந்து கொண்டோம்.
4ம் தேதி டெல்லி சென்று வலியுறுத்தினோம். 10ம் தேதி ஆகிவிட்டது, இதுவரை அதற்கான ஒரு சிறு அடையாளம் கூட இல்லை. டெல்லி சென்றோம், பேசினோம், வந்தோம். ஆனால் வென்றோமில்லை. எந்த சலனமும் இதுவரை ஏற்படவில்லை. இலங்கைக்கு வெளி விவகார அமைச்சர் சென்றதாக இல்லை. இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு தலைமை தாங்குகிற முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரை நாம் கேட்பது.
இலங்கை என்றுமே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்தியாவுக்கு அது பகை நாடு என்பதை இந்தியா உணரவில்லை. அல்லது ஈழ தமிழர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் ஏன் அமெரிக்கா கூட இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற வேண்டும். தமிழ் ஈழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். அது இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடாக இருக்கும் என்பதை முதல்வர் கருணாநிதி சொல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது கூட நெருங்கி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்துக்கு மரணக் குழி காத்திருக்கிறது.
போரை நிறுத்துவது மட்டும் தீர்வாகாது. அரசியல் தீர்வு என்பது என்ன? இன்னும் 100 ஆண்டுகளானாலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை தர மாட்டார்கள்.
டெல்லி சென்ற போது ஐ.நா. மூலமாக பாதுகாப்பு கவுன்சிலுக்கு சென்று முறையிடலாம் என்றெல்லாம் கூறினோம். பிரதமருக்கு இலங்கை பிரச்சினையில் ஆலோசனை கூற கட்சி சார்பற்ற 2 தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றேன். என்ன சொல்லியும் என்ன பிரயோஜனம். ஒன்றுமே நடக்கவில்லை.
இப்போது மனித சிவில் உரிமை கழக தலைவர் வக்கீல் சுரேஷ் உலக நீதிமன்றத்தில் முறையிட சர்வதேச குற்றவியல் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்படி 30 நாட்களில் உலக நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பொன்சேகா ஆகியோரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார் ராமதாஸ்.