நம் எதிரிகளால் இணைவோம்-ராகுல் காந்தி

லோக்சபாவில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி கொதிப்புடன் பேசினார். ஒவ்வொரு இந்திய இளைஞனின் கோபத்தையும் அவரது பேச்சு பிரதிபலித்தது.
ராகுல் காந்தி பேசுகையில், இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தரப்படுகிறது. பிரகாசமான ஒளி விளக்குகள் பொருத்தப்பட்ட பைலட் வண்டிகள், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை வீரர்களின் பாரா உஷார், மேடைகளைச் சுற்றி பல அடி தூரங்களுக்கு யாரையும் நெருங்க விடாமல் தடுக்கும் பாதுகாப்பு, அடேயப்பா.
இந்த பாதுகாப்பு சாதாரன சாமானியனுக்கு கிடைக்கிறதா.
நமது நாட்டில் எத்தனை ரயில் நிலையங்களில் எதிரில் இருப்பவர் கூடத் தெரியாத அளவுக்கு விளக்குகள் அழுது வடிகின்றன.
பயங்கரவாதிகள் தாக்கிய பிறகு மக்களை பாதுகாத்தால் மட்டும் போதாது. மேலும் ஒரு அடி மேலே போக வேண்டும். நம்முடைய மக்களின் உயிரை விலைமதிப்பற்றதாக நினைக்கிறோம் என்பது மட்டும் அல்ல. அப்படிப்பட்ட உயிரை வாங்கினால் என்ன ஆகும் என்பதை ஏவியவர்கள் உணர வேண்டும்.
நம்முடைய நகரங்களுக்கு இப்படி அடிக்கடி வந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் இளைஞர்கள் அல்லது முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், இந்துக்கள், முஸ்லீம்கள் என குறி வைத்து தாக்குத்ல நடத்தவில்லை. மாறாக இந்தியர்களைத்தான் அவர்கள் குறி வைத்துள்ளனர். நம்முடைய எதிரி நம்மை ஒரே இனமாக கருதி தாக்கும்போது நாமும் ஒரே இனமாக திரண்டு எழ வேண்டும்.
நாட்டுக்கு எதிராக தொடரப்படும் இந்தப் போரை எதிர்கொள்வதே நம்முடைய தேசியக் கடமையாகவும் தேசிய முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். இந்தப் போரை நாம் நடத்துவோம்.
தாக்குதல் நடத்தியவர்கள் நமது நாட்டின் பாரம்பரியச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நாம் எல்லாம் பிரிந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தை தேர்ந்தெடுத்தார்கள். உலக நாடுகளின் கவனம் தம் மீது பட வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடங்களைத் தேர்வு செய்தார்கள்.
பயங்கரவாதியின் சீரும் துப்பாக்கியைக் கண்டும் அஞ்சாமல் அவனிடமிருந்து அதைப் பறிக்க வீரமுடன் முயன்றார் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே. அதேசமயம், தன்னைக் காத்துக் கொள்ள அவரிடம் குண்டு துளைக்காத உடையோ அல்லது சக்தி வாய்ந்த துப்பாக்கியோ அவரிடம் இல்லாததால், அவர் அங்கேயே உயிர் துறக்க நேரிட்டது.
காவல்துறையில் அரசியல் தலையீடு கூடாது, காவல்துறையினர் நியமனம், இடமாறுதல் போன்றவற்றில் அரசியல் தலைவர்கள் ஈடுபடுவது நல்லதல்ல.
நான் சொல்ல விரும்பும் மையக் கருத்து என்னவென்றால், சாமான்யனின் உயிருக்கும் முக்கியத்துவம் தாருங்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் இந்தக் கருத்தை உள் வாங்கி நம்முடைய உளவு அமைப்பின் தலைவர்களுக்கும் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும் உணர்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
தனி மனிதனின் உயிர் எவ்வளவு அற்பமாகப் போய் விட்டது. எத்தனை குண்டுவெடிப்புகள், எத்தனை உயிரிழப்புகள். இதையெல்லாம் நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்டோம்.
பயங்கரவாதிகளின் ரத்தப் பசிக்கு நம்முடைய மக்கள் பலிகடவாக்கப்பட்டுள்ளனர் என்பதை நமக்கு நினைவூட்ட மும்பை போன்ற சம்பவங்கள் தேவையில்லை. நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்த இந்தியராக இருந்தாலும், அவருடைய உயிரைக் காப்பது நம்முடைய கடமை என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications